தோள் தொட்டு விரல் சுட்டும் பேருள்ளம்
குருஜி சௌந்தர் அவர்களின் மாணவனாக யோகம் பயில்கிறேன். எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவருடைய தனித்தன்மை என்ன என்பதற்கு இவருக்கு நவீன வாழ்வியலின் சிக்கல்கள் புரிகின்றன என்பதுதான் பதில். நான் ஏறக்குறைய 1998 ஆம் ஆண்டு ஓர் ஆன்மீகப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். வாசிப்பது தொடர்பான என்னுடைய சிக்கலை அந்த பயிற்சியைக் கற்பித்த ஆசிரியரிடம் கூறியபோது அவர் ஏன் நீங்கள் படிக்க வேண்டும்? என்று எதிர்க் கேள்வி கேட்டார். சிறிது காலம் கழித்து வேறோர் ஆன்மீகப் பயிற்சி. என்னுடைய நிலையழிவுகளை அந்த ஆன்மீகப் பயிற்சியைக் கற்பித்த ஆசிரியரிடம் முன்வைக்கும் அளவிற்கு என்னால் அவரை அணுக முடியவில்லை. குருஜியிடம் எது பற்றியும் பேசலாம், எப்போது வேண்டுமானாலும் பேசலாம்! நம்முடைய குறைபாடுகளையும் பலவீனங்களையும் சேர்த்தே அவர் நன்றாகப் புரிந்து கொள்வார். நமக்கு தேவையானது என்ன என்பதை ஓர் ஆசிரியராக அவர் அறிவதை பலமுறை கவனித்திருக்கிறேன். நான் பதஞ்சலியின் யோக சூத்திரம் படித்துவிட்டேன் என்று ஒருவகை போலிப்பெருமிதத்தில் இருந்து வந்தேன். அவர் சொல்வளர்க்காடு , கிராதம், இமைக்கணம் இங்கிருந்து ...