Posts

சிந்தை கவர வேண்டும் சிந்தை

அருஞ்சொல் இதழ் நின்றபோது மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அது தொடர்பாக இதே வலை பக்கத்தில் ஒரு சிறு குறிப்பையும் எழுதியிருந்தேன். புதிய தலைமுறை குழுமம் சார்பில் சிந்தை என்ற இதழ் தொடங்கப்பட்டிருப்பதை மிகவும் அண்மையில் தான் அறிந்து வாசிக்கத் தொடங்கினேன். அருஞ்சொல் இதழில் இடம்பெற்ற அதே வகை உள்ளடக்கங்கள். மெட்ராஸ் பேப்பர், அருஞ்சொல் ஆகிய இதழ்களில் வெளிநாட்டு நிகழ்வுகள் தொடர்பான கட்டுரைகளை விரும்பி வாசிப்பது என் வழக்கம்.  இன்று மே 3. . இன்று மட்டும் அருஞ்சொல் இதழில் இரண்டு கட்டுரைகள் வந்திருக்கின்றன.‌ தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு பெரிய சக்தியாக நடிகர் விஜயுடைய கட்சி இருக்கும் என்ற பொருளில் இதழியலாளர் திரு. சமஸ் கட்டுரை எழுதியிருக்கிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு திமுக மீதான விமர்சனம் சமஸ் எழுத்துக்களில் தற்போது கூடுதலாகவே இருக்கிறது.. இது வரவேற்கத்தக்க நிகழ்வு. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாரும் ஜனநாயகத்தில் இருக்க முடியாது என்ற நம்பிக்கையே நம்மைத் தொடர்ந்து செலுத்தும் உந்து சக்தியாக ஜனநாயகத்தில் உள்ளது.           அருஞ்சொ...

நமக்குக் கேட்கும் சாதனாவின் குரல்

இந்தக் குறிப்பு ஸ்ரீ சத்யானந்தர் மரபார்ந்த யோக மையத்தின் சார்பில் யோகப் பயிற்சி செய்யும் மாணவர்களை மனத்தில் இருத்தி எழுதப்பட்டுள்ளது. மற்ற நண்பர்கள் தவிர்த்து விடலாம்.  ஒவ்வொரு நாளும் ஒரு யோகமாணவர்   ஆசனம், பிராணாயாமம்,  பிரத்யாகாரம் என்று யோகப் பயிற்சி செய்து வருகிறார். ஆனால் சில நாட்கள் பயிற்சிகளை முறையாக செய்ய முடியவில்லை. அப்போது என்ன நிகழும் என்பதற்கு என்னளவில் சில அவதானிப்புகளை முன்வைக்கமுடியும்.  1. தொடக்க காலத்தில் பயிற்சி செய்யும் போதும் மாற்றங்களை நம்மால் எளிதில் கண்கூடாக பார்க்க முடியாது.. இதற்கு நானே ஓர் எடுத்துக்காட்டு. தொடக்கத்தில்   பயிற்சி செய்த நாட்களிலும் மனச்சோர்வை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அது மெல்ல மெல்ல மாறும் என்பது அப்போது எனக்குத் தெரியாது, ஆனால்  அது  மாறியது .   2. சிறிது காலம் கழித்து உடல் மற்றும் மன நிலைகளில் பயிற்சி செய்யும் நாட்களுக்கும் பயிற்சி செய்யாத நாட்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்  தெளிவாகத் தெரியத்  தொடங்கின. . பயிற்சி செய்த நாளுக்கும் செய்யாத நாளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஒரு ...

மழையில் நனைகிறார். எஸ். ரா

முன்பு சாருவிற்கு நடந்தது இப்போது எஸ்ராவிற்கு நடக்கிறது. யாருக்கு நடந்தாலும் எனக்கு சந்தோஷம்தான். ஏறக்குறைய ஓராண்டு இருக்கும். சாரு கவிதைகளாக எழுதி அவருடைய இணையதளத்தில் வெளியீட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவருடைய இணையதளத்தில் ஒரு கவிதை பிரசுரமாகியிருக்கும். தற்போது எழுத்தாளர் எஸ்.  ரா வின் சிறுகதைகள் தொடர்ந்து  அவருடைய இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.          எழுத்தாளர் எஸ். ரா அவர்களின் சிறுகதைகளில் கிராமம் என்றும் நகரம் என்றும் சொல்ல முடியாத சிற்றூர்கள், அங்கு எளிய நிலையில் வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கை ஒருவித மாயத்தன்மையுடன் புனைவாகிறது. உதாரணமாக கிளி ஜோதிடம் சொல்லும். ஒருவரின் கதையை எடுத்துக் கொள்ளலாம்.  ஒருவருடைய கிளிக்கூண்டு காணாமல் போகிறது. ஒரு புதிரான முறையில் அது திரும்பக் கிடைக்கிறது. ஓராண்டு  முன்பு பணியில் இருந்து ஓய்வு பெறும் ஓர் அரசு அதிகாரியின் வாழ்க்கையை எஸ். ரா எழுதிக் காட்டியிருந்தார். அவ்வாறே ஒரு தங்கும் விடுதியில் காவலராக பணிபுரியும் ஒருவரின் கதையையும்  எழுதியிருந்தார். ...

தோள் தொட்டு விரல் சுட்டும் பேருள்ளம்

குருஜி சௌந்தர் அவர்களின் மாணவனாக யோகம் பயில்கிறேன். எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவருடைய தனித்தன்மை என்ன என்பதற்கு இவருக்கு நவீன வாழ்வியலின் சிக்கல்கள் புரிகின்றன என்பதுதான் பதில். நான்  ஏறக்குறைய 1998 ஆம் ஆண்டு ஓர் ஆன்மீகப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். வாசிப்பது தொடர்பான என்னுடைய சிக்கலை அந்த பயிற்சியைக் கற்பித்த ஆசிரியரிடம் கூறியபோது அவர் ஏன் நீங்கள் படிக்க வேண்டும்? என்று எதிர்க் கேள்வி கேட்டார்.  சிறிது காலம் கழித்து வேறோர் ஆன்மீகப் பயிற்சி. என்னுடைய நிலையழிவுகளை அந்த ஆன்மீகப் பயிற்சியைக் கற்பித்த ஆசிரியரிடம் முன்வைக்கும் அளவிற்கு என்னால் அவரை அணுக முடியவில்லை.  குருஜியிடம் எது பற்றியும் பேசலாம், எப்போது வேண்டுமானாலும் பேசலாம்!  நம்முடைய குறைபாடுகளையும் பலவீனங்களையும்  சேர்த்தே அவர் நன்றாகப்  புரிந்து கொள்வார். நமக்கு தேவையானது என்ன என்பதை ஓர் ஆசிரியராக அவர் அறிவதை பலமுறை கவனித்திருக்கிறேன். நான் பதஞ்சலியின் யோக சூத்திரம் படித்துவிட்டேன் என்று ஒருவகை போலிப்பெருமிதத்தில் இருந்து வந்தேன்.  அவர் சொல்வளர்க்காடு , கிராதம், இமைக்கணம் இங்கிருந்து ...

எழுத்தாளர் சி. முத்துக் கந்தன் நாவல்கள் குறித்து பேசுகிறேன்

பேராசிரியர் சி முத்துக்கந்தன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் எங்களுடன் படித்தார். எங்களுக்கு சில ஆண்டுகள் இளையவர் அவர். சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ் துறையில் பேராசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார். அடிமரம், அகன்ற பேழை, வேறு யாருக்கும் அனுமதி இல்லை ஆகிய மூன்று நாவல்களை முத்து எழுதியிருக்கிறார்.  இந்த நாவல்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது. பழங்குடி இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு எழுத்துப் பயிற்சி வகுப்புகளையும்  முத்துக்கந்தன் நடத்துகிறார்.  எழுத்தாளர் சி. முத்துக்கந்தன்  அவர்கள் தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை சார்பில்  நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று  உரையாற்றுகிறேன். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத் துறை சார்பில் ஏப்ரல் 9 வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணி அளவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நண்பர்களைச் சந்திக்க ஆசையாக இருக்கிறது. 

அஞ்சலி; எழுத்தாளர் அரவிந்தன்

எழுத்தாளர் அரவிந்தன் இன்று மறைந்தார் என்று எஸ். ரா அவர்களின் இணையதளம் வாயிலாக தெரியவந்தது. எழுத்தாளர் சைலபதி, கவிஞர் சங்கரராம சுப்பிரமணியன் மூலம் அறிமுகம் . நாங்கள் நடத்தி வந்த சென்னை அண்ணாநகர் ஆய்வு வட்டம் சார்பில் அவருடைய பொன் நகரம் என்ற நாவலுக்காக ஒரு விமர்சனக் கூட்டம் நடத்தினோம். இரவு மங்கிய வேளையில் சென்னை அண்ணாநகர் லியோ பள்ளி வாசலில் நின்று இலக்கியம் குறித்து பொதுவாக அவர் பேசிக் கொண்டிருந்த ஞாபகம்.   அஞ்சலி ‌ 

சந்தத்தின் சிறு நடனம்

கவிஞர் வி. சங்கர் அவர்களின் சூது பவளம் கண்டேன் அல்லேன் என்ற கவிதை தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன். ஒரே ஒரு முறை மட்டும் தான் ஒவ்வொரு கவிதையையும் படித்திருக்கிறேன். அர்த்தம் பற்றி எல்லாம் அப்புறம் பேசலாம். சந்த அனுபவத்திற்காகவே ஒருமுறை படித்துப் பார்க்கலாம். நவீன கவிதைகளில் காணப்படும் ஓசை வறட்சியை இந்தத் தொகுப்பு போக்கிவிட்டது என்று கவிஞர் லட்சுமி மணிவண்ணன் அவர்கள் முன்னுரையில் கூறியிருக்கிறார். நண்பர்களுக்குப்  பரிந்துரைக்கிறேன் .