விண்ணில் விரியும் சிறகுகள்
கடல் பெரியது. அது எல்லா நதிகளையும் தன்னுள் சேர்த்துக் கொள்கிறது. வானம் பெரியது, ஏனென்றால் அது நம் கற்பனையால் விரிகிறது. உள்ளத்தை கடலென்றும், வாழ்வை வானென்றும் வகுத்துக் கொள்ளலாம். காலம் இடம் பற்றிய நமது பிரக்ஞையை கலைத்துப் போட்டு தாங்கள் விரும்பும் பிரபஞ்சத்தை படைக்க முயலும் படைப்பாளிகள் நட்சத்திரங்களைக் கொண்டு கழங்காடும் அரக்கர் குலப் பெண்களாக கம்பனில் வெளிப்படுகிறார்கள். விண்ணில் பறந்து வந்து சிறுநீர் கழிக்கும் வயசங்களாக இரா .முருகன் நாவல்களில் மனிதர்கள் வருகிறார்கள். காலம், இடம், தர்க்கம் இவை கலைஞர்களுக்கு உயிரல்ல, வெறும் அணிகலன்கள் . 1800 காலகட்டத்தில் நடக்கும் கதை. ஆங்கில அரசு, சிதிலமடைந்த நில உடமை விழுமியங்கள் , வியாபாரமும் குமாஸ்தாத்தனமும் கௌரவம் மிக்க பணிகளாக கருதப்படும் காலம். புகையிலை வியாபாரம் செய்யும் சுப்பிரமணிய ஐயர், சித்தம் பேதலித்த மூத்த மகன் சாமிநாதன், பக்கத்து வீட்டு ஜமீன்தார், இறந்த பிறகும் சம்போகம் தேடும் கிழவர், அவ்வப்போது வீட்டுக்கு வந்து போகும் மூத்தகுடிப் பெண்கள் என்று தொடரும் ந...