அந்தப் புறாக்கள்
என்னுடைய கல்லூரிக் காலகட்டம். என் ஆசிரியர் சா. பாலுசாமி அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் எழுத்தாளர் ஜி நாகராஜன் குறித்து ஓர் உரையாற்றினார். தற்செயலாக ஒரு நாள் ஆசிரியர் இல்லத்திற்குச் சென்றிருந்தபோது கட்டில் மீது காலச்சுவடு இதழ்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. காலச்சுவடு இதழை நான் முதலில் பார்த்த ஞாபகம் அதுதான். என்னுடைய முதுகலைக் காலகட்டத்தில் காலச்சுவடு இரு மாத இதழாக மறுபடியும் வெளிவரத் தொடங்கியிருந்தது.
அவ்வப்போது காலச்சுவடு இதழை வாசிக்க முயன்றதுண்டு. அண்மையில் ஓராண்டு சந்தா கட்டி இணைய வழியில் இதழை வாசித்து வந்தேன். ஆனால் தொடர்ச்சி விடுபட்டுவிட்டது. இப்போது முயன்று ஐந்தாண்டு சந்தா கட்டிவிட்டேன். ஓர் இலக்கிய இதழ் தொடர்ந்து வாசிக்க கிடைப்பதென்பது மகிழ்ச்சியான விஷயம் இல்லையா,
என் மகிழ்ச்சியை அதிகப்படுத்துவது போல எழுத்தாளர் எம் கோபாலகிருஷ்ணன் எழுதிய முடிய சாளரம் என்ற சிறுகதை மே மாத இதழில் வெளிவந்துள்ளது.
நெசவாளர் பின்னணி கொண்ட கதை தான். மனைவி சுவாசக் கோளாறால் இறந்துபோவதற்கு வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த புறாக்களின் வாசனையும் எச்சமும் காரணங்கள் என்று சொல்லப்படுகிறது. இருந்த போதும் அந்தப் பெரியவர் தொடர்ந்து புறா வளர்க்கிறார் . பந்தத்தை விட பணத்தை அதிகமாக நினைக்கும் தங்கைகளால் ஏற்பட்ட விலக்கத்தை சமன் செய்ய பெரியவர் புறா வளர்க்கிறார் என்றும் கொள்ளலாம். இந்தப் புறாக்களை கடைசியில் அவர் கொடுத்து விடுகிறார். இந்த நிகழ்வு பற்றுகளிலிருந்து வெளிவரும் ஆன்மீக வளர்ச்சி என்று நாம் உணருமாறு கதை முடிவடைகிறது.
எதிர்பாராத ஒ ஓர் இறுதித் திருப்பம் போல புறாக்கள் குறியீட்டுத் தன்மை பெற்றிருப்பது மிகவும் அழகாக இருக்கிறது.
நண்பர்களுக்கும் சிறுகதையைப் பரிந்துரைக்கிறேன்.
Comments
Post a Comment