ஆசிரியர் சேலம் சங்கருக்கு அஞ்சலி

நான் படித்த தூய லூயி காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் பள்ளியில் வரலாற்றுப் பாடம் கற்பித்த ஆசிரியர் சேலம் சங்கர் அவர்கள். எங்கள் ஆசிரியர் பள்ளியில் அறியப்பட்டது வரலாற்று ஆசிரியர் என்பதை விட ஓர் இலக்கிய ஈடுபாட்டாளராக. தனது கம்பீரமான குரல், அடுக்கு வசன நடை இவற்றால் எங்கள் மனதில் இடம் பிடித்தார். பள்ளி சார்பில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் நாங்கள் படித்த காலத்தில் அவர் தான் தொகுப்பாளர். தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் சரளமாகப் பேசுவார். சேலம் சங்கர் எம் ஏ என்று மேடையில் அவர் சொல்வதே அழகு. 
நிலவோ அந்த வானத்திலே
நான் நின்று கொண்டிருந்தேன் மோனத்திலே
வந்தால் வஞ்சி தேரினிலே
நான் தந்தேன் நெஞ்சை அவள் பாரினிலே
என்று தொடங்கும் கவிதை ஒன்று இப்படி முடியும்
மறைந்தவள் மறைந்தே போகட்டும்
அவள் மங்கல வாழ்வு வாழட்டும் 
நிலவில் அவள் முகம் தெரியட்டும்
அந்த நினைவில் என் கதை முடியட்டும்
நாங்கள் இந்த கவிதையில் பித்தாகி அலைந்திருக்கிறோம். மோகன் இளங்கலை நேர்முகத் தேர்வில் இந்தக் கவிதையைச்சொல்லித்தான் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இடம் பெற்றுங்கொண்டான்.  ஒட்டு மாங்கனி, எச்சில் இரவுகள் என்று சில சினிமாக்களில் தான் வசனகர்த்தாவாக இருந்ததாக சார் சொல்வார். அதெல்லாம் ஒன்றும் அவருக்குப்  பெயர் வாங்கித் தரவில்லை. 
கல்லூரி சேர்ந்த பிறகு சங்கர் சாரை சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. 
நான் பித்துக் கொள்ள வேறு கவிதைகளும் வந்துவிட்டன. 
நேற்று சங்கர் சார் காலமாகிவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. 
வணக்கம் சார்.  போய் வாருங்கள்
நாங்கள் வந்து சந்திக்கும்போது வேறு புதிய கவிதைகளுடன் நீங்கள் தயாராகயிருக்கவேண்டும் , சரியா 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்